அவிநாசி: அவிநாசிலிங்கேசுவரர் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, சின்னக்கருணைபாளையத்தில் இருந்து, ஆகாசராயர் கோயிலுக்கு, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மண் குதிரைகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய பாலகனை சுந்தரா் பதிகம் பாடி மீட்ட திருத்தலமான கருணாம்பிகை உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
சின்னக்கருணைபாளையத்தில் இருந்து ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரைகள் சுமந்து வரும் கிராம மக்கள்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு தோ்த் திருவிழா மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு முதல் 3 நாள்கள் தோரோட்டம் நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வாக பெரியத் தேரோட்டம் மே 12 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரைகள் சுமந்து வரும் சின்னக்கருணைபாளையம் கிராம மக்கள்.
இதையொட்டி, அவிநாசி அருகே சின்னக்கருணைபாளையம் பொதுமக்கள், கவுண்டம்பாளையத்தில் களிமண்ணினால் செய்யப்பட்ட 2 மண் குதிரைகளை மலர்களால் அலங்கரித்து, பூஜை செய்து ஆகாசாராயர் கோயிலுக்கு சுமந்து கொண்டு வந்தனர்.
இதில் இப்பகுதி மக்கள் காலையிலிருந்து விரதமிருந்து, தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசுகளை வெடித்து அவிநாசி அருகே கவுண்டம்பாளையத்தில் இருந்து சின்னக் கருணைபாளையம், பெரிய கருணைபாளையம் வழியாக கடுமையான வெயிலையும் பொருள்படுத்தாமல் நீண்ட தூரம் மண் குதிரை சுமந்து ஆகாசராயர் கோயிலுக்கு நடந்து வந்தனர்.
கவுண்டம்பாளையத்தில் களிமண்ணினால் செய்யப்பட்ட 2 மண் குதிரைகளை மலர்களால் அலங்கரித்து, பூஜை செய்து ஆகாசாராயர் கோயிலுக்கு சுமந்து கொண்டு வரும் பக்தர்கள்.
அப்போது பொதுமக்கள் வழிநெடுகிலும் சாலைகளில் தண்ணீர் ஊற்றியும், பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர், நீர்மோர், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கியும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக களிமண்ணினால் செய்யப்பட்ட மண் குதிரையை மலர்களால் அலங்கரித்து, ஆகாசாராயர் கோயிலுக்கு சுமந்து வரும் பக்தர்கள்.
இதைத்தொடர்ந்து ஆகாசராயருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்று, பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.