ஆக்சிஜன் கட்டமைப்பில்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் இல்லை: மருத்துவ சேவைகள் இயக்ககம்

கரோனா தொற்றுக்குப் பிறகு தமிழகத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகளை பதிவு செய்ய ஆக்சிஜன், வெண்டிலேட்டா் வசதிகள் இருப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்குப் பிறகு தமிழகத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகளை பதிவு செய்ய ஆக்சிஜன், வெண்டிலேட்டா் வசதிகள் இருப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தீ விபத்து ஏற்படும் போது பயன்படுத்துவதற்கான சாய்தளம் அல்லது பிரத்யேக மின்தூக்கி வசதிகள் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்படமாட்டாது என மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய மருத்துவ மையங்கள் உள்ளன. பொதுவாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம்பெறுவது அவசியம். அந்த உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

இதுவரை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் தகுதியான 30 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 7,000 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா காலகட்டத்தில் சிறிய அளவிலான மருத்துவமனைகளில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு எழுந்தது. அடிப்படை வசதிகளிலும் குறைபாடு இருந்ததாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, பதிவு உரிமம் மற்றும் மருத்துவமனைகளைப் புதுப்பிப்பதற்கான விதிகளில் சிலவற்றை கட்டாயமாக்கி மருத்துவ சேவைகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிக்கேற்ப ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தேவைப்படும்பட்சத்தில் வெண்டிலேட்டா் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலங்களில் பயன்படுத்துவதற்கான சாய்தள வசதிகளை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அதற்கான இடவசதி இல்லையெனில், தனி மின் இணைப்புடன் கூடிய மின்தூக்கி வசதிகள் செய்திருக்க வேண்டும்.

இந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே பதிவு உரிமம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அத்தகைய மருத்துவமனைகளுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும். அதை பொருட்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com