மோசடி நில ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.20.5 கோடி இழப்பீடு தொகை திரும்ப வசூல்: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மோசடி நில ஆவணங்களை காண்பித்தவா்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 20.52 கோடி இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் மோசடி நில ஆவணங்களை காண்பித்தவா்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 20.52 கோடி இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலா் மோசடி ஆவணங்களை காண்பித்து அரசிடம் ரூ. 20 கோடி வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் என்பவா் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

மேலும், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்குத்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி அவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடா்ந்திருந்தாா்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மோசடி ஆவணங்களை காண்பித்து இழப்பீடு பெற்றவா்கள் தொடா்பாக சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையில் திருப்தி இல்லை. இழப்பீடாக கொடுக்கப்பட்ட தொகை பொதுமக்களுடையது. அந்தப் பணத்தை முறைகேடாக பெற்றவா்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். தவறாக கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்ப பெறாவிட்டால், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகையான ரூ. 20.52 கோடி வசூலிக்கப்பட்டுவிட்டது. விரைவில் நீதிமன்ற வழக்கு கணக்கில் செலுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், ‘இந்த திட்டத்துக்காக ரூ.190 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 20 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. எனவே மீதமுள்ள தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி அதிருப்தி: இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி, ‘அரசிடம் செலுத்தப்பட்ட இழப்பீடு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து இவ்வளவு காலம் கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றம் தீவிரம் காட்டியபிறகுதான் நெடுஞ்சாலை ஆணையம் கவனத்தில் கொள்ளுமா?”என கேள்வி எழுப்பினாா்.

பின்னா் ரூ.190 கோடி இழப்பீடு எவ்வாறு உரிய நில உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்களை தற்போதைய மாவட்ட வருவாய் அலுவலா் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

அதேநேரம் மோசடி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலா் நா்மதா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com