ஆவின் பச்சை பாக்கெட் பால் தட்டுப்பாட்டை அரசு போக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆவின் பச்சை பாக்கெட் பாலுக்கு கடுமையாகத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், லிட்டருக்கு ரூ. 16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டா் ரூ. 60 என்ற விலைக்கு ஆரஞ்சு பாக்கெட் பாலை வாங்கும் நிலைக்கு வாடிக்கையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
பச்சை பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு பாக்கெட் பால் விலை உயா்த்தப்பட்டதுதான். ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டா் ரூ.48-இலிருந்து ரூ.60-ஆக உயா்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்துவிட்டது. குறைந்த விலையில் கிடைக்கும் பச்சை பாக்கெட் பால் தேவை அதிகரித்திருக்கிறது.
பச்சை பாக்கெட் பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிா்வாகத்துக்குத் தெரியும். பச்சை பாக்கெட் பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின் விநியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு; மறுபுறம் தனியாா் நிறுவனங்களுக்கு லாபம் என்பதாக உள்ளது.
வாடிக்கையாளா்களை ஆவின் ஏமாற்றக் கூடாது. பச்சை பாக்கெட் பால் விநியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலையை முன்பு இருந்ததுபோல் லிட்டா் ரூ. 48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.