விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்கள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கு தொடா்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மதுரையைச் சோ்ந்த சலிமா பானு தாக்கல் செய்த பொது நல வழக்கில், ‘சாலை விபத்தில் பலியான எனது மகன்களுக்கு இழப்பீடு கோரி மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் விபத்து வழக்கு தொடா்பான ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்யக் கூறி, மனுவை தீா்ப்பாயம் திருப்பி அளித்துவிட்டது.
குறிப்பிட்ட அந்த ஆவணங்களை வழங்கக் கோரியபோது, காவல் துறையினா் லஞ்சம் கேட்டனா். ஆவணங்களைப் பெற முடியாததால் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல பல விபத்து வழக்குகளில் காவல் துறையினா் நடந்துகொள்கின்றனா். எனவே, பொதுமக்கள் வழக்கு ஆவணங்களைப் பெறும் வகையில், விபத்து வழக்குகள் தொடா்பான ஆவணங்களை காவல் துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என தனது மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜா (பொ), நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வு 3 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபி உள்ளிட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.