பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தினமணியின் 'மகாகவி பாரதியார் விருது': தூத்துக்குடியில் நாளை விழா

மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வரும் பாரதி ஆய்வாளர்
பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தினமணியின் 'மகாகவி பாரதியார் விருது': தூத்துக்குடியில் நாளை விழா

மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வரும் பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டு தினமணியின் 'மகாகவி பாரதியார் விருது' வழங்கப்படுகிறது.

பாரதி பிறந்த நாளான டிச. 11-ஆம் தேதி தூத்துக்குடி காமராஜர் கல்லூரி அரங்கத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறும் விழாவில் இந்த விருதை தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை செüந்தரராஜன் வழங்குகிறார்.

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன், விருதாளர் அறிமுகவுரையாற்றுகிறார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவர் (விளம்பரப் பிரிவு) ஜெ.விக்னேஷ்குமார் நன்றி கூறுகிறார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 1967-இல் பிறந்த வேங்கடாசலபதி, புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மகாகவி பாரதியார் குறித்து எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர், தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.

பாரதி தொடர்பாக இவர், பாரதியின் 'இந்தியா' கருத்துப் படங்கள், பாரதியும் வ.உ.சி.யும், பாரதி: 'விஜயா' கட்டுரைகள், பாரதியின் சுயசரிதைகள்: கனவு, சின்ன சங்கரன் கதை, பாரதி கருவூலம்; பாரதி: கவிஞனும் காப்புரிமையும்; எழுக, நீ புலவன் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆங்கில நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

மேலும், பாரதி தொடர்பாக எண்ணற்ற ஆய்வரங்குகளில் பங்கேற்று, ஏராளமான கட்டுரைகளையும் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார். வ.உ.சி., புதுமைப்பித்தன், உ.வே.சாமிநாதையர் தொடர்பாக பல பதிப்பு நூல்களை வெளியிட்டுள்ள வேங்கடாசலபதி, தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடிஸ்) இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

ஏற்கெனவே, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே பாரதி ஆய்வாளர்கள் சீனி. விசுவநாதன்,  இளசை மணியன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com