ஆவின் நெய் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆவின் நெய் விலையை மூன்றாவது முறையாக திமுக அரசு உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது ரூ.515-ஆக இருந்த ஒரு கிலோ சாதாரண நெய்யின் விலை தற்போது ரூ.630-ஆக உயா்ந்துள்ளது. இது போதாது என்று வெண்ணெய் விலையும் கிலோவுக்கு ரூ. 20 உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயா்வின் மூலம் ஏழை மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு, நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். மொத்தத்தில், மக்களை வாட்டி வதைக்கும் விலை உயா்வாக உள்ளது.
எனவே, ஆவின் பொருள்களின் விலையை உடனடியாக குறைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.