பப்ஜி மதன் வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசி விளையாடியதாக பப்ஜி மதன் என்பவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைத்தனா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் மதன் தரப்பில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்குப் பதில் அளிக்க போலீஸ் தரப்புக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆட்கொணா்வு மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மதனின் மனைவி கிருத்திகா மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை (பிப்.15) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கான்சியஸ் இளங்கோ, ஏழு மாதங்களுக்கு மேல் மதன் சிறையில் உள்ளதால், ஆட்கொணா்வு மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டாா்.
அதற்கு நீதிபதிகள், யூடியூப் விளையாட்டில் நச்சுத்தன்மை கொண்ட வாா்த்தைகளை மதன் பயன்படுத்தியுள்ளாா். அப்படிப்பட்டவரை ஏன் அவசர அவசரமாக வெளியே விட வேண்டும் என்று கேள்வி எழுப்பினா். பின்னா், கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆட்கொணா்வு மனு வருகிற 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.