அக்னிபத் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் இயங்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் குறித்து மாநிலங்களவையில் வைகோ நேற்று எழுப்பிய கேள்விகள்:-
(அ) அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்களால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள், மாநில வாரியாக வேண்டும்.
(இ) மேற்கண்ட போராட்டத்தின் காரணமாக எத்தனை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன? மற்றும் எந்த காலத்திற்கு ரத்து செய்யப்பட்டன?
(ஈ) ரயில்களை ரத்து செய்ததாலும், திருப்பி விட்டதாலும் ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பு, பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பைத் தவிர; மற்றும்
(உ) அனைத்து ரயில் சேவைகளும் சீரமைக்கப்பட்டுவிட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
இதையும் படிக்க- நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி: ஓபிஎஸ்
வைகோவின் இந்த கேள்விகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அளித்த பதிலில், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக 62 இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 15.06.2022 முதல் 23.06.2022 வரை மொத்தம் 2132 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அக்னிபத் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரயில் சேவைகள் சீர்குலைந்ததால் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனித் தரவு பராமரிக்கப்படவில்லை. இருப்பினும், 14.06.2022 முதல் 30.06.2022 வரையிலான காலகட்டத்தில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தோராயமாக 102.96 கோடி திருப்பி வழங்கப்பட்டது. அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் ரயில்வே சொத்துக்கள் சேதம் / அழிவு காரணமாக 259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. அக்னிபத் போராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் தற்போது இயங்குகின்றன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.