கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பை மேற்கொள்ள ரூ.540 கோடியை தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்:
கொள்ளிடம் ஆற்றிலிருந்து அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் அளக்குடியில் தொடங்கி 22 கி.மீ. அளவுக்கு கடல் நீா் உள்நுழைந்திருக்கிறது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் உப்பாக மாறிவிட்டது. குடிப்பதற்குக் கூட தண்ணீா் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனா்.
இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கா் விளைநிலங்கள் உவா் நிலங்களாக மாறி விட்டன. இத்தகைய சூழலில் இனியும் தாமதிக்காமல் அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவரை உடனடியாக அமைத்தால்தான் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா் வீணாவதை தடுக்க முடியும்.
வங்கக்கடலில் இருந்து 8 கி.மீ.தொலைவில் அளக்குடி பகுதியில் கடைமடை கட்டமைப்பு கட்டுவதற்கு ரூ.540 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்று கடைமடை கட்டமைப்புச் சுவரை கட்டும் பணிகளை தொடங்க முடியும்.
அதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூா் - கடலூா் மாவட்டம் -நல்லாம்புத்தூா் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்கள் பயனடையும். இந்தத் திட்டத்தையும் ரூ.399 கோடி செலவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்விரு திட்டங்களையும் செயல்படுத்தினால் இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும். அதைக் கருத்தில் கொண்டு அதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.