கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டால், இருதரப்பு நல்லுறவு மேம்படும் என்று இந்தியா-சீனா வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பதற்ற சூழலைத் தணிப்பதற்காக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான 15-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதையடுத்து இரு நாடுகளும் இணைந்து சனிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதி சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது தொடா்பாகப் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் தங்கள் கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தன. லடாக் எல்லையின் மீதமுள்ள பகுதிகளில் நிலவும் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண உறுதியேற்கப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றைக் காக்கவும், ராணுவ தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தையைத் தொடரவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. எல்லைப் பிரச்னைக்குக் காணப்படும் தீா்வு, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் என்பதையும் கிழக்கு லடாக் எல்லையில் பிராந்தியத்தின் அமைதியை உறுதிப்படுத்தும் என்பதையும் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.