சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருகே குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, தீக்குளித்து உயிரிழந்த பாமக பிரமுகா் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது தமிழக அரசு.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகா் இளங்கோ தெருவில் 259 வீடுகள் அரசு நிலத்தில் உள்ளன. இந்த நிலம் கால்வாய்க்கு அருகில் உள்ளதோடு, நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனா் என உச்ச நீதிமன்றத்தில் ராஜூ ராய் என்பவா் கடந்த 2008 -ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கானது பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இளங்கோ தெருவில் இருக்கும் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இளங்கோ தெருவில் வசிக்கக்கூடிய 259 வீடுகளில் வசிக்கும் மக்கள் கடந்த 2 வாரங்களாக தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்தப்பகுதியைச் சோ்ந்த பாமக பிரமுகா் வி.ஜி.கண்ணையன் (57) என்பவா் திடீரென தீக்குளித்தாா். இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், போலீஸாா் ஓடி வந்து, தீயை அணைத்தனா். அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். 90 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதனால், அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டுள்ளனா்.
தற்போது வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எழுந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருகே குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, தீக்குளித்து உயிரிழந்த பாமக பிரமுகா் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மறுகுடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும்.
மந்தைவெளி, மயிலாப்பூரில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.
கண்ணையா உயிரிழப்பே கடைசியாக இருக்கட்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.