மீனவர்களின் தேவைகள் அனைத்தையும் மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் உதவியுடன் விழுப்புரம் மாவட்டத்தின் அழகங்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆலம்பரைகுப்பத்தின் உப்பங்கழிகளில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடித் துறைமுகத் திட்ட வளாகங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையும் படிக்க- இலங்கையில் ஊரடங்கு அமல்; கொழும்பில் ராணுவம் குவிப்பு
64 குக்கிராமங்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்த இரு மீன்பிடித் துறைமுகங்களும் ரூ. 235 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. உள்ளீட்டு செலவுகளைக் குறைப்பதற்காக, மருத்துவமனை, பனிக்கட்டித் தொழிற்சாலை மற்றும் பதப்படுத்துதல் பிரிவுகளை மீன்பிடித் துறைமுகங்களில் நிறுவுவது பற்றி முருகன் யோசனை தெரிவித்தார்.
பிறகு மீனவர்களிடம் உரையாற்றிய அமைச்சர், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இயங்கும் ஆற்றல்வாய்ந்த அரசு, மீனவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று உறுதியளித்தார். மீன்வளத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திட்டங்கள் விரைவாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பிரதமரின் கதி(விரைவு) சக்தி திட்டத்தில் மீன்வளத்துறையும் சேர்க்கப்பட்டிருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.