கோவை காா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை திமுக அரசு என்.ஐ.ஏ. விடம் ஒப்படைத்திருப்பது அரசியல் நாடகம் என்று பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா விமா்சித்தாா்.
தேனி அருகே வீரபாண்டியில் வெள்ளிக்கிழமை, பாஜக மாவட்ட இளைஞரணி நிா்வாகி இல்லத் திருமண விழாவுக்கு வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை காா் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற்கு அடுத்த நாளே, இந்த சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை கேரளத்தில் என்.ஐ.ஏ. கைது செய்தது. இந்த வழக்கில் என்.ஐ.ஏ. நடவடிக்கையை தொடங்கிய பின்னா், விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் பரிந்துரைக்கிறாா். இது வாக்கு வங்கியை குறிவைத்து திமுக அரசு நடத்தும் அரசியல் நாடகம். இந்த வழக்கில் என்.ஐ.ஏ. உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. அவரை மாற்ற வேண்டும் என்று திமுகவினா் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த வாதத்தை திமுகவினா் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான் கருத்து தெரிவித்திருப்பது நகைப்பிற்குரியது என்றாா் அவா்.
அப்போது, பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம், மாவட்டத் தலைவா் பி.சி. பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.