சிவகாசி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் அஸ்ஸாம் இளைஞருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியில் துணிப் பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அப்துல்அலி மகன் மொஜாம்அலி (21) என்பவரை சிவகாசி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி பூரணஜெயஆனந்த், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற குற்றவாளி மொஜாம்அலிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.