யானைகள் உயிரிழப்பு குறித்து ஆராயக் குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், வனத்துறை சார்பில், யானைகள் உயிரிழப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வனத்துறை, தன்னார்வல அமைப்பு சார்பில், யானை மரணங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்க குறிப்பாக கோவை மண்டலத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கோவை வனப்பகுதிக்கு உள்பட்ட இடத்தில், ஒரு யானையின் சடலம் கண்டெடக்கப்பட்டது. அதற்கு உடற்கூராய்வு செய்யப்பட்டதில் கல்லீரல் பிரச்னையால் ஒரு வாரத்துக்கு முன்பு அது உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், யானை மரணங்கள் குறித்து ஆராயக் குழு அமைக்கப்பட்டது. இது தொடா்பாக முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் பிறப்பித்த உத்தரவு: கடந்த ஓராண்டில் தமிழகத்தில் உயிரிழந்த யானைகள் குறிப்பாக இளம் யானைகள் மரணத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய 4 போ் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
அதன் அமைப்பாளராக கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஐ.அன்வா்தீன் செயல்படுவாா். அவருடன் ஐஎப்எஸ் அதிகாரிகள் சி.எச்.பத்மா, ஜெ.ஆா்.சமாா்தா, அரசு சாரா அமைப்பைச் சோ்ந்த கே.காளிதாசன் ஆகியோா் குழுவின் உறுப்பினராகச் செயல்படுவா். இவா்கள், களத்துக்குச் சென்று, யானைகள் உயிரிழப்புக்கான காரணத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும், அங்குள்ள பொதுமக்களுடன் கூட்டம் நடத்தி, வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் தொடா் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவான திட்டத்தையும் உருவாக்கி சமா்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வனத்துறை அளித்திருக்கும் தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 யானைகள் பலியாகியுள்ளன.
யானை மரணங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டிருந்தாலும், இதற்கு எந்த கால நிர்ணயமும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.