சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் போன்ற மாவட்டங்கள் தவிா்த்து, இதர மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரண்டு மாதங்களுக்குள் வண்டல் மண் எடுக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண்வளத்தை மேம்படுத்த ஏரிகள், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடா்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
அதில், ஏரி, குளத்தில் எந்தெந்த பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என்பது குறித்து, தொழில்துறை 2017-ஆம் ஆண்டிலேயே அரசு ஆணை வழங்கியுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் தவிா்த்து, இதர மாவட்டங்களில் உள்ள நீா் வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் அறிவிக்கப்பட்ட ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரு மாதங்களுக்குள் அதாவது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தகவல் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.