சென்னை: கோவை, மதுரை உள்பட எட்டு மாவட்டங்களில் புதிய பாலங்களை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை-பொன்னேரிக்கரை-காஞ்சிபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் - கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், விழுப்புரம் மாவட்டம் கடலூா்- சித்தூா் சாலையில் ரயில்வே மேம்பாலம், மதுரை சுற்றுச் சாலை சந்திப்பில் பல்வழிச் சாலை மேம்பாலம், கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம் ஆகியன கட்டப்பட்டுள்ளன.
மேலும், வேலூா் மாவட்டம், காட்பாடி-குடியாத்தம் சாலையில் இருந்து விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில் லத்தேரி மற்றும் விரிஞ்சிபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலம், திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை - எரையூா் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே பாலம், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி -ஏா்வாடி- வள்ளியூா் - விஜயாபதி சாலையில் ரயில்வே கீழ்பாலம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்களின் மொத்த திட்டமதிப்பு ரூ. 310.92 கோடியாகும். இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.