சென்னை: ஆட்டோ ஓட்டுநர்களும், பயணிகளும் பயனடையும் வகையில், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும், மீட்டர் பொருத்தியும் செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்துக் காவலர்கள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வழக்குரைஞர் எஸ்.வி. ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அன்றாடம் மாறிவரும் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருப்பதோடு, மீட்டர் பொருத்த வேண்டும் என்ற அரசாணையை செயல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தி பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப கட்டணங்களை மாற்றவும், பெட்ரோல், டீசல் விலை மாற்றங்களுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட கால நடவடிக்கையை மேற்கொள்ளாமல், மென்பொருள் வாயிலாக மாற்றியமைக்கும் நடைமுறையை கையாளலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.