திம்பம் மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி கோரி சத்தியமங்கலம், தாளவாடியில் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்-கர்நாடகம் இரு மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் உள்ள வன சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் 16.2 டன் எடை அளவுள்ள 6 மற்றும் 10 சக்கர லாரிகள் மட்டுமே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படும் எனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையடைப்பு போராட்டத்தில் மக்கள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காட்சியளிக்கும் சக்தி நகராட்சி தினசரி அங்காடி.
இதன் காரணமாக திம்பம் சாலையைப் பயன்படுத்தும் கனரக லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடிகளில் 16.2 டன் எடை அளவுள்ள சரக்கு லாரிகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வனத்துறையினர் அனுமதிப்பதால் மற்ற கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சோதனைச் சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, திம்பம் மலை சாலையில் கனரக வாகனங்களுக்கு அனுமதி கோரி இன்று சத்தியமங்கலம் நகர் பகுதியில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம், கோவை சாலை, கோபி சாலை, அத்தாணி சாலை, கடைவீதி, திப்புசுல்தான் சாலை, மைசூர் டிரங்க் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்று காலை 10 மணிக்கு பண்ணாரி சோதனை சாவடியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.