சீர்காழி பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை குறித்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் உள்கோட்டத்தில் உள்ள 7 காவல்நிலைய எல்லை பகுதிகளில் கள்ள சாராயம் மற்றும் வெளிமாநில மது விற்பனையை தடை செய்வதற்காக சீர்காழியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 1 ஆய்வாளர் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 17 பேர் பணியாற்றி வந்தனர்.
கடந்த 7 ஆம் தேதி சாராய விற்பனை குறித்த விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து விசாரணை நடத்திய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பரிந்துரையின் பேரில், கடந்த 8 ஆம் தேதி சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் கவிதா மற்றும் காவலர் ஹரிஹரன் ஆகியோரை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி பணியிடை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் நேற்று சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய மீதமுள்ள 15 போலீசாரையும் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார். போலீசார் அனைவரும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் போலீசார் நியமிக்கப்படும் வரை சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
விடியோ வைரல் ஆனதால் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இது வரவேற்கப்பட்டாலும் சாராயம் மற்றும் வெளிமாநில மது விற்பனையை முழுமையாக தடை செய்துவிட முடியாது.
சாராயம் மற்றும் வெளிமாநில மது விற்பனைக்கு உடந்தையாக செயல்படும் காவல்நிலையங்களில் பணியாற்றும் சில போலீசாரின் நடவடிக்கை குறித்தும் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரிகள் முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கள்ளச்சாராய விற்பனையை தடை செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.