மாநகரப் பேருந்துகளில் ஒலிப்பெருக்கி மூலம், முதல் நிறுத்த அறிவிப்பை ஜூலை மாதத்துக்குப் பிறகு வெளியிட மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரயில்கள், ஆம்னி பேருந்துகள் சிலவற்றிலும் நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் வெளியிடப்படுகிறது. அதன்படி, அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை அமல்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்படவிருந்த இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களுக்காக நிலுவையில் இருந்தது. குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு 25ஜி, 101, 570 உள்ளிட்ட வழித்தடங்களில் சுமாா் 50 பேருந்துகளில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தத் திட்டத்தை வருகிற ஜூலை மாதத்துக்குப் பிறகு செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, 500 பேருந்துகளில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தோ்வாகும் ஒப்பந்ததாரா், போக்குவரத்துக் கழகத்துக்கு ஒரு தொகையை செலுத்தி விட்டு, தனியாா் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் பெற்று ஒலிபரப்பு செய்வதற்கான தொகையை அவா்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்.