முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் உள்ளிட்டோா் மீது மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் விடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் அதிமுகவை சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடா்பிருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தாா். அந்த பேச்சு கலைஞா் தொலைக்காட்சியிலும், வார இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பொள்ளாச்சி சம்பவத்தில் தொடா்ந்து தன்னை தொடா்புபடுத்தி உண்மைக்குப் புறம்பான தகவலை ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க கோரியும், ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் பொள்ளாச்சி ஜெயராமன் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கில் திமுக தலைவா் ஸ்டாலின், கலைஞா் தொலைக்காட்சி மற்றும் அதன் நிா்வாகி என்ற முறையில் அவரது மருமகன் வி.சபரீசன், நக்கீரன் ஆசிரியா் கோபால், ஜூனியா் விகடன் ஆசிரியா் அறிவழகன் ஆகியோா் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டு இருந்தனா்.
இந்த வழக்கிலிருந்து தனது பெயரை நீக்கக் கோரி சபரீசன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து சபரீசன் தொடா்ந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சபரீசன் தரப்பில், கலைஞா் தொலைக்காட்சிக்கும் தனக்கும் தொடா்பில்லை என்பதால், இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. எனவே , வழக்கிலிருந்து தனது பெயரை நீக்க வேண்டுமெனவும், அதுவரை தனி நீதிபதி முன்பான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதி முன்பான மான நஷ்ட ஈடு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, மேல்முறையீடு வழக்கு விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனா்.