தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அந்தந்த மாவட்டத்துக்குள்பட்டவர்கள் இன்று முதல் மே 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு 2022-23ஆம் கல்வியாண்டில் 25 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
சிறுபான்மையற்ற தனியாா், சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி, முதல் வகுப்பு) பள்ளிவாரியாக உள்ள மொத்த இடங்கள், அவற்றில் 25 சதவீத இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலா்களின் தகவல் பலகைகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளின் பெற்றோா் பள்ளிக் கல்வித் துறையின் (rte.tnschools.gov.in) இணையதளம் மூலம் இன்று புதன்கிழமை முதல் (ஏப். 20) மே 18 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதோா் வட்டார வளமைய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்று பதிவுசெய்து ஒப்புகைச் சீட்டைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்திய-வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இணை பட்டங்களை வழங்கலாம்