தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லி பயணம்
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரிக்கை வலுத்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று தில்லி செல்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்தது. தொடர்ந்து சட்டப்பேரவையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் ஆளுநரின் வாகனம் சென்ற வழியில், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தில்லிக்கு இரண்டு நாள்கள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி செல்கிறார்.