சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் சென்னை விசாரணை கைதி மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக தரப்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, விசாரணை கைதி உயிரிழப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“சென்னை மாநகரப் போலீசார் மேற்கொள்ளும் வழக்கமான வாகனப் பறிசோதனையின்போது, பட்டினம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.
கஞ்சா போதையில் இருந்த அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பதிலளிக்காததால், வாகனத்தையும் அவர்களையும் சோதனை செய்துள்ளனர். அதில், கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, விக்னேஷ் என்பவர் வர மறுத்துள்ளார். அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினரை தாக்க முயற்சித்துள்ளார்.
அதை சமாளித்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுரேஷ் மீது கொலை உள்பட 11 வழக்குகள், விக்னேஷ் மீது இரு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, 19.4.2022 அன்று காலை இருவருக்கும் உணவு அளித்துள்ளனர். காலை உணவிற்கு பிறகு விக்னேஷுக்கு வாந்தி, வலிப்பு வந்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காவல்துறையினர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக மரணம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, உதவி ஆய்வாளர், காவலர், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு கடைகோடி மனிதருக்கும் மனித உரிமை காக்கப்பட்டு உரிய நீதி கிடைக்க அரசு துணை நிற்கும்.”