
தீ விபத்து: அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால் பதற்றம்
சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தி வருகிறார்கள். தீ விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தீ விபத்துக்குள்ளான இடம், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வைக்கும் இடம் என்பதால், அங்கிருந்த சிலிண்டர்கள் தீ விபத்தினால் வெடித்தன. தீ விபத்துக்கிடையே வெடி சப்தமும், அதனைத் தொடர்ந்து கரும்புகையும் வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்துக்குள் இருந்த சிலிண்டர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
Fire fighters doze the fire at Bradfiel surgical block Rajiv gandhi government general hospital in chennai. @NewIndianXpress @shibasahu2012 @haisat2005 @xpresstn . Video by Ashwin prasath pic.twitter.com/Xwhfd9VZdJ
— Ashwin Prasath (@ashwinacharya05) April 27, 2022
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வந்த தளத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு திடீரென தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்துக்குள்ளான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் தீயணைப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டன.
இதையும் படிக்க.. பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து, மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
தீ விபத்து நிகழ்ந்த பகுதி, அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் என்றும், கல்லீரல் சிகிச்சைப் பிரிவு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் இந்த தீ விபத்து நேரிட்ட நிலையில், திடீரென வெடிசப்தம் கேட்டது. வெடி சப்தத்தைத் தொடர்ந்து கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது.
கீழ் தளத்தில் தீவிபத்து நேரிட, மேல் தளத்தில் இருந்த 32க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியே பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டனர்.
தீ விபத்து நேரிட்டது அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை என்பதால், அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் இருக்கலாம், அவைதான் வெடிக்கின்றன என்றும் சம்பவ இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின. இதுவரை எத்தனை நோயாளிகள் அங்கு சிக்கியிருக்கிறார்கள் என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
கீழ் தளத்தில் தீப்பற்றி, அதனால் எழும் புகை முழுவதும் மேல் தளத்துக்குச் செல்வதால் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு எழக்கூடும் என்பதால் அவர்களை பத்திரமாக மீட்கும் பணி விரைவாக நடைபெற்றது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீட்புப் படையினர், மருத்துவமனை வளாகத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளிகளை மீட்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட அனைவரையும் பத்திரமாக மீட்டு வருகிறார்கள்.