தஞ்சை தேர்த் திருவிழாவில் பலியானோருக்கு  முதல்வர் அஞ்சலி

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில், தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து பலியான 11 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி  செலுத்தினார்.
தஞ்சை தேர்த் திருவிழாவில் பலியானோருக்கு  முதல்வர் அஞ்சலி
தஞ்சை தேர்த் திருவிழாவில் பலியானோருக்கு  முதல்வர் அஞ்சலி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மாலை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஒவ்வொரு வீடாகச் சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

அப்போது அமைச்சர் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

களிமேடு கிராமத்தில் நடந்த விபத்தில் பலியான எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ், எஸ். பரணி (13)  ஆகியோர் உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டது. இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடல்களை, அவரவர் வீடுகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்திய மு.க. ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தேர்த் திருவிழாவில் கோர விபத்து

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.

இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது.

தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம்  வைத்து படையல் செய்து வழிபட்டனர்.  புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.

இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ்,  ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம்  (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13), எஸ். பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com