வரி ஏய்ப்பைத் தடுக்க உதவுவோருக்கு வெகுமதி, ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்க தட்கல் முறை என பொதுமக்கள் பயனடையும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பேரவையில் இன்று வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்த முக்கிய அறிவிப்புகள்..
பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித்துறையில் 'எனது விலைப்பட்டியல் - எனது உரிமை' என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
இதையும் படிக்க.. சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகளில் செயல்படும்
இதன் மூலம் மக்கள் தங்களது விலைப்பட்டியலின் ஒளிநகல்களை இணையத்தில் பதவு செய்து குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.
வணிக வரித்துறையில் வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை பயன்படுத்தப்படும்.
வணிக வரித்துறையில் வரி ஆய்வுக் குழு அமைக்கப்படும்.
வணிக வரித்துறையின் அழைப்பு மையம் மேம்படுத்தப்படும்.
வணிக வரி கூடுதல் ஆணையர் தலைமையில் தனி தணிக்கைப் பிரிவு உருவாக்கப்படும்.
சென்னை மற்றும் கோவையில் உள்ள இரண்டு இணை ஆணையர் நுண்ணறிவு பணியிடங்கள் கூடுதல் ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்.
வணிக வரித் துறையின் பயிற்சி நிலைய இயக்குநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டு அவரது தலைமையின் கீழ் எளிய வணிக பிரிவு உருவாக்கப்படும்.
பதிவுத் துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் உருவாக்கப்படும்.
திருமண சான்றுகளில் திருத்தம் செய்வதற்காக இணையவழியாக விண்ணப்பிக்கும் வசதி 6 லட்சம் ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
அலுவலகங்களில் பணியாற்றும் மக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும்.
சென்னை பதிவு மண்டலம் தெற்கு, வடக்கு என இரு பதிவு மண்டலங்களாகப் பிரிக்கப்படும். சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு கூடுதலாக ஒரு பதிவு மாவட்டம் உருவாக்கப்படும்.
மதுரை பதிவு மண்டலம் பிரிக்கப்பட்டு இரு மண்டலங்கள் உருவாக்கப்படும்.
கோவை பதிவு மாவட்டத்தைப் பிரித்து இரு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும்.
சிறப்பாக செயல்படும் பதிவுத்துறை அலுவலர்களை ஊக்குவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.