கட்சியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டதாகக் கூறி மாவட்டச் செயலாளர்கள் 3 பேரை இடைநீக்கம்ஸ் செய்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் சே. செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம். சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைகோ தனது அறிக்கையில், 'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாத இறுதியில் மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், தலைமை கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் இதுதொடர்பாக வைகோவுக்கு தனியே கடிதம் எழுதியிருந்தார். மேலும், துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, கட்சியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி துரை வையாபுரிக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
இதையும் படிக்க | துரை வைகோ நியமனத்துக்கு மதிமுக பொதுக்குழு ஒப்புதல்