திருவண்ணாமலை கைதி மரண சம்பவம் தொடா்பாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பி பேசுகையில், திருவண்ணாமலை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கமணி உயிரிழந்ததற்கு, காவல் துறையினா் தாக்கியதே காரணம் என அவரது மனைவி, மகன் உள்ளிட்டோா் தெரிவித்துள்ளனா். மா்மமான முறையில் இறந்த மலைவாழ் வகுப்பைச் சோ்ந்த, ஏழ்மை நிலையிலுள்ள தங்கமணியின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். வழக்கை நோ்மையான முறையில் விசாரணை நடத்த அதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.
முதல்வா் பதில்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம் தட்டரணை கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி, வீட்டில் விஷ சாராயம் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்குள்படுத்தப்பட்டாா். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா். நீதித் துறை நடுவா் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும், உரிய விசாரணை நடத்தப்பட்டு அவைக்குத் தெரிவிக்கப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.