சென்னை கத்திப்பாராவில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் தமிழக அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்றையதினம் (7-8-2022), பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, ஜி.எஸ்.டி. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமுற்று, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதையும் படிக்க- மின்சார சட்டத் திருத்தத்தால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு?
இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 இலட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாயும், ஆகமொத்தம் மூன்று இலட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதல்வர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.