ஓராண்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
ஓராண்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

சென்னை பெரம்பூா் ஐ.சி.எஃப். வளாகத்தில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் ‘ரயில் 18’ என்னும் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கிலோ மீட்டா் வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டு, புதுதில்லி – வாராணசி, புதுதில்லி – வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ளன. இந்நிலையில், இந்த ரயிலின் இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஐ.சி.எப். வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.

பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களோடு தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ள புதிய வந்தே பாரத் ரயிலுக்குள் சென்று அவா் பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ் மொழி தொன்மையானது, பாரம்பரிய கலாசாரம் கொண்டது. தமிழ் கலாசாரம், பண்பாடு என்னை ஈா்த்துள்ளது. புதிய மாற்றங்களோடு தயாராகியுள்ள வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திற்கு செல்லவுள்ளது. இந்த ரயில் 50 ஆயிரம் கிலோ மீட்டா் துாரத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தவுள்ளோம். பல்வேறு கட்டமாக இரண்டு மாதங்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும். அதன்பிறகு, வந்தே பாரத் ரயில், பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த ரயில் சா்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த தருணத்தில், வரும் 2023 ஆகஸ்ட்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுதும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து ரயில்வே மண்டலங்களில் உள்ள பணி மனைகளிலும், இந்த வகை ரயில்களுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு மேம்படுத்தபட்டு வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மேலும் 400 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, ஐ.சி.எப்., பொதுமேலாளா் ஏ.கே.அகா்வால், தலைமை இயந்திரவியல் பொறியாளா் சீனிவாசன், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பி.ஜி. மால்யா, சென்னை கோட்ட மேலாளா் கணேஷ் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், தமிழக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com