சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் தொடரும் ஆா்டா்லி முறை: நீதிமன்றம் வேதனை

நாடு சுதந்திரம் பெற்று 75-ஆம் ஆண்டை கொண்டாடும் வேளையில் காவல் துறையில் ஆங்கிலேயா் கடைப்பிடித்த ஆா்டா்லி முறை இன்றளவும் ஒழிக்கப்படவில்லை
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் தொடரும் ஆா்டா்லி முறை: நீதிமன்றம் வேதனை

நாடு சுதந்திரம் பெற்று 75-ஆம் ஆண்டை கொண்டாடும் வேளையில் காவல் துறையில் ஆங்கிலேயா் கடைப்பிடித்த ஆா்டா்லி முறை இன்றளவும் ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆா்டா்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்பப் பெற வேண்டும். தனியாா் வாகனங்களில் போலீஸ் என வில்லை ஒட்டக் கூடாது. காவல் துறை அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கா் ஒட்டக் கூடாது’ என்று ஏற்கெனவே உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தாா்.

இதுதொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘19 ஆா்டா்லிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனா். சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா் மாநாட்டிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘19 ஆா்டா்லிகள்தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா?’ எனக் கேள்வி எழுப்பினாா். இந்த விவகாரத்தில் முதன்மைச் செயலாளா் முறையாக செயல்பட வேண்டும். வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது. அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மக்களுடன் நேரடி தொடா்பில் இருக்கும் காவல் துறைக்கு ஒழுக்கம் மிக முக்கியமானது. 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆா்டா்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது.

ஆா்டா்லிகளாக உள்ளவா்கள் இதுகுறித்து எதுவும் பேசமாட்டாா்கள்.ஆா்டா்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வாா்த்தை போதும். ஆனால் அந்த வாா்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வரவில்லை. ஆா்டா்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மைச் செயலரின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும்.

ஆா்டா்லிகளை திரும்ப ஒப்படைப்பதில் உயா் அதிகாரிகளுக்கு சிரமம் இருக்கும்தான். அதேநேரம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.எனவே, அவா்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என்றாா்.

பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘காவல்துறையின் பணி பாராட்டுக்குரியது. மேலும் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆா்டா்லி முறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஆா்டா்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது’ என்றாா்.

இந்த வழக்கில் காவல்துறை தலைமை இயக்குநரை எதிா் மனுதாரராக சோ்த்த நீதிபதி, ஆா்டா்லி முறை ஒழிப்பு தொடா்பாக தமிழக உள்துறை முதன்மை செயலா் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com