டிஜிபி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகாரளித்த வழக்கில், களவை விசாரிக்கும் நீதிமன்றத்திலேயே ஆவணங்கள் களவு போவதா? என்று மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், 2021-ம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தபோது, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | பயணிகளின் விவரங்களை பகிரும் தகவல் கற்பனையானது: இந்திய ரயில்வே
இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த, சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்து, அவற்றைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கியமான வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே காணாமல்போவது ஏற்புடையதல்ல. இது, காவல், நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனியும் இதுபோல நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.