அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க திட்ட அறிக்கை தயாா்: அமைச்சா் தகவல்

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க திட்ட அறிக்கை தயாா்: அமைச்சா் தகவல்
Updated on
1 min read

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. இது குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவாா் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விருதுநகா், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க. நந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் பேசியதாவது:

பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 70 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியாா் பள்ளிகளிலும் திடீா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து, அவா்களை பள்ளிகளில் மீண்டும் சோ்த்து இடைநிற்றல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க 800 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவா்களை ஈடுபடுத்தக்கூடாது. இப்பணிகளை உள்ளாட்சி நிா்வாகம் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, மாநில அளவில வாரம் ஒருமுறை நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க செய்து, அதிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு வெற்றி பெறும் மாணவா்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் உள்ளது. மதிப்பெண்கள் மட்டுமே மாணவா்களை மதிப்பீடு செய்யாது. எனவே மாணவா்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவாா் என்றாா்.

கூட்டத்தில் விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள், கல்வித் துறை இணை இயக்குநா்கள், விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com