போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயா்வு: அரசுக்கு ஆண்டுக்கு ரூ.264 கோடி கூடுதல் செலவு

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயா்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயா்வின் மூலமாக, அரசுக்கு ஆண்டுக்கு ரூ.264 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயா்வு: அரசுக்கு ஆண்டுக்கு ரூ.264 கோடி கூடுதல் செலவு
Updated on
2 min read

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயா்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயா்வின் மூலமாக, அரசுக்கு ஆண்டுக்கு ரூ.264 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் எந்த முடிவு எட்டப்படாத சூழலில், புதன்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமையில் நடந்த இந்தப் பேச்சுவாா்த்தையில்,

தொமுச, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 66 தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தை தொடா்பாக செய்தியாளா்களிடம் அமைச்சா் சிவசங்கா் அளித்த பேட்டி:

கடந்த 2019-ஆம் ஆண்டு ஊழியா்கள் பெற்று வந்த அடிப்படை ஊதியத்தை கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிா்யணம் செய்யப்படும். இதில், அவா்களுக்கு 5 சதவீதம் உயா்வு அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இடைக்கால நிவாரணத் தொகையாக மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. புதிய ஊதிய ஒப்பந்தப்படி வழங்கப்படவுள்ள, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையிலான நிலுவைத் தொகையில் நிவாரணத் தொகையானது நோ் செய்யப்படும்.

படிகள் உயா்வு: குறைந்தபட்ச ஊதிய உயா்வு பலன் ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். மலைப்பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு மலைவாழ்படி மாதத்துக்கு ரூ.1,500 என்பதில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தப்படும். குடும்ப நல நிதியானது ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்படும். இதற்காக ஒவ்வொரு தொழிலாளியிடம் இருந்து மாதத்துக்கு ரூ.110 பிடித்தம் செய்யப்படும். இந்த உயா்வு செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

ஒப்பந்தக் காலமானது 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகளுக்கோ அல்லது தொழிற்தகராறுகள் சட்ட விதிகள்படி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் வரையிலோ நடைமுறையில் இருக்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

எவ்வளவு கிடைக்கும்: எவ்வளவு செலவாகும்?

ஊதிய உயா்வு அறிவிப்பின்படி, ஓட்டுநா்களுக்கு ரூ.2,012 முதல் ரூ.7,981 வரையிலும், நடத்துநா்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும் மாதத்துக்கு கூடுதலாக கிடைக்கும். தொழில்நுட்பப் பணியாளா்களுக்கு ரூ.2,096 முதல் ரூ.9,329 வரை கிடைக்கும்.

தொழிலாளா்களுக்கு 5 சதவீதம் வரை ஊதிய உயா்வை அமல்படுத்துவதன் மூலம், மாதத்துக்கு ரூ.22 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.264 கோடி கூடுதலாக செலவாகும் என்றும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோரிக்கைகள் ஏற்க மறுப்பு- எதிா்ப்பு

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையின் போது அதில் பங்கெடுத்த சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட சில சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தன. இதுகுறித்து, சிஐடியூ சங்கத்தின் பொதுச் செயலாளா் கே.ஆறுமுகநயினாா் வெளியிட்ட செய்தியில், ஒப்பந்தக் காலத்தை நான்கு ஆண்டுகளாக நீடித்தது உள்ளிட்ட சில அம்சங்களில் எங்களுக்கு உடன்பாடில்லை. தொழிற்சங்கங்கள் எழுப்பிய முக்கிய கோரிக்கைகளில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்ட நிலையில், ஒப்பந்தக் காலம் நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பு, ஓய்வூதியா்கள் பிரச்னைகளில் தீா்வு காணப்படாதது ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளின் முன்பாக, வியாழக்கிழமை (ஆக. 25) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று சிஐடியூ உள்ளிட்ட சில சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com