வெளிநாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், தமிழகத்தில் இருந்தால், அவா்களுக்கு மீதத் தவணை தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கும், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை 96.20 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டா் தவணையை 60 லட்சம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா்.
இதைத் தவிர 12 வயது முதல் 18 வயது வரை உள்ள 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆக்கபூா்வமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளில் முதல் தவணையோ அல்லது இரு தவணைகளுமோ கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தாலும், அவா்களுக்கான மீதத் தவணை தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை தகுதியானவா்களுக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அதுகுறித்த விவரங்களையும், அறிவுறுத்தல்களையும் பணியாளா்களுக்கு தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.