அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்ட தொடக்கவிழாவில் கலந்துகொள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
முன்னதாக, அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இத்திட்டத்திற்கு 'புதுமைப் பெண்' என பெயரிடப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் இத்திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்க உள்ளார்.
மேலும், தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரிப் பள்ளிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.