எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ. சுந்தரமகாலிங்கம் செவ்வாய்க்கிழமை (ஆக.30) காலமானார். அவருக்கு வயது 82.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பலகுடி வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் தெ.சுந்தரமகாலிங்கம். ஓய்வு பெற்ற ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், தமிழில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், பல இலக்கிய கூட்டங்களிலும் சிறப்புரையாற்றியுள்ளார்.
இதனிடையே, வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தெ. சுந்தரமகாலிங்கம், இன்று (ஆக.30) காலமானார்.
இவர், காலத்தை வாசித்தல், துரோகம் வெட்கம் அறியாது ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். பிடல் காஸ்ட்ரோ புத்தகத்தை தமிழாக்கம் செய்துள்ளார்.
மேலும், தினமணி, ஜனசக்தி, தீக்கதிர், உள்ளிட்ட நாளிதழ்களில் கட்டுரைகளும் உயிரெழுத்து, அம்ருதா,காலச்சுவடு உள்ளிட்ட மாத இதழில் கட்டுரைகள் மற்றும் வாசக கடிதம் எழுதியுள்ளார்.
இவரின் மனைவி அமர்ஜோதி 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு திலீபன் (53)கோபிநாத் (52)கௌதமன்(47) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டே தனது கண் மற்றும் உடலை தானம் செய்ய வேண்டும் என அவர் எழுதி வைத்திருந்தார். அதன்படி, தெ. சுந்தரமகாலிங்கத்தின் உடல் மற்றும் கண்ணை குடும்பத்தினர் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினர்.
மேலும், தனக்கு எந்தவிதமான சடங்குகளும் செய்ய வேண்டாம் என அவர் எழுதி வைத்திருந்தததால், அதனையும் அவரின் குடும்பத்தினர் நிறைவேற்றினர்.