ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 12 நாள்களில் நான்காவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது எப்போது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் வெளியிட்டிருப்பதாவது: சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த உத்தண்டி வளவு கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்ற ஓட்டுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 36-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாள்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலை இதுவாகும்.
ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதற்கு அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளே சாட்சி. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக மாறுவதை தவிர்க்க முடியாது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நிகழும் தற்கொலைகளை ஆளுனர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.