கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் சுருளி அருவியின் மற்றொரு நீர்வரத்து பாதையான ஹைவேவிஸ் தூவானம் அணை பகுதியிலும் மழை பொழிவால் உபரி நீர் வெளியேறியது.
இதனால் புதன்கிழமை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்காணிப்பு செய்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்லாதவாறு வன ஊழியர்களை பாதுகாப்பிற்காக நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனச்சரகர் வி.பிச்சைமணி கூறியது, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் புதன்கிழமை குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்த பின் குளிக்க, பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.