சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சியை டிச.28ஆம் தேதி தொடங்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. டெண்டரை ரத்து செய்ய மறுத்த உத்தரவை எதிர்த்தும், அபராதத்தை எதிர்த்தும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 2023-ஆம் ஆண்டுக்கான 47-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருள்காட்சியை நடத்துவதற்கான டெண்டா் அறிவிப்பு கடந்த அக். 31-ஆம் தேதி சுற்றுலாத் துறை வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை எதிா்த்து பெங்களூரைச் சோ்ந்த ‘ஃபன் வோ்ல்டு ரிசாா்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இதையும் படிக்க- சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸா?
அந்த மனுவில், டெண்டா் கோரி தங்களது நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், டெண்டா் திறக்கப்பட்ட போது, தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றி விட்டு டெண்டரை இறுதி செய்துள்ளதால், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தங்கள் டெண்டா் படிவத்தையும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், எனவும் கோரப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது என டெண்டா் நிபந்தனைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.