தமிழ்நாட்டில் பிஎஃப்-7 கரோனா இல்லை; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: தமிழக அரசு அறிவிப்பு 

தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கரோனா இதுவரை கண்டறியப்படவில்லை. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்று முதல்வர் மு.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கரோனா இதுவரை கண்டறியப்படவில்லை. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தற்போதைய கரோனா நிலவரம் குறித்து அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். 

சமீபத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளான ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சுகாதாரச் செயலாளரின் சுற்றறிக்கையின்படி, தொற்று பாதிப்பு எண்ணிக்கை கண்காணிக்கவும், தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணி வரிசைப்படுத்துதல் பிரிசோதனை அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது தமிழ்நாட்டில் உள்ள கரோனா தொற்று எக்ஸ்பிபி வகையாகும். இது பிஏ-2 உருமாறிய கரோனாவின் உள் வகையாகும். தற்போது பரவி வரும் பிஎஃப்-7 வகையான சில ஆசிய நாடுகளில் கரோனா தொற்று பிஏ-5 இன் உள் வகையாகும். இத்தகைய பிஏ-5 தொற்று தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக கண்டறிப்பட்ட இந்த தொற்று வகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள். பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கண்ட வசதிகள் கூடுதலாக்கப்படும் என தெரிவித்தார். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, கரோனா பரிசோதனை செய்யவும், தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழு மரபணி வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யவும், நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும் மேலும் இன்புளுயன்சா மாதிரி காய்ச்சல் மற்றும் அதிக நுரையீரல் தொற்று ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

முதல்வர் கரோனோ மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி, குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார். இதற்கு தேவையான நடவடிக்கைாகள் எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். 

பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com