தஞ்சாவூர்: தொடர் பனியால் செண்டி பூக்கள் கருகியதாலும் உரிய மகசூல் இல்லாததாலும் விவசாயி ஒருவர் பூத்துக் குலுங்கும் செடிகளை டிராக்டர்களைக் கொண்டு உழும் காட்சி வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி அருகே ரோஸ் என்கிற விவசாயியின் விளை நிலத்தில் 5 ஏக்கரில் செண்டி பூ சாகுபடி செய்யப்பட்டது.
சபரிமலை சீசன் தொடங்கியும் பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும் கிலோ 60 ரூபாய்க்கு விற்க வேண்டிய பூக்கள் 20 முதல் 30 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் பூக்கள் அனைத்தும் கருகி வருகின்றன.
இதனிடையே, செலவு செய்தும் உரிய மகசூல் மற்றும் விலை இல்லாததால் வேதனை அடைந்த விவசாயி, தனது ஐந்து ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, பூத்துக் குலுங்கும் செண்டி பூக்களை டிராக்டர் கொண்டு உழுது, மாற்று பயறு விளைவிக்க தயாராகிறார்.
பூத்துக் குலுங்கும் செடிகளை அவர் டிராக்டர் கொண்டு அழிக்கும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை கலங்க வைக்கிறது.