மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் தை அமாவாசை யாகம் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி கோயில் யாகசாலையில் புனித நீர்க் கலசம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோயிலுக்குள் திரண்டிருந்தனர். இவர்கள் கரோனா விதிமுறைகளை கடை பிடித்து சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து யாக நிகழ்ச்சிகளை கண்டு தரிசித்தனர்.
தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் யாகத்தை நடத்தி வைத்தனர். யாகத்தில் பட்டுப் புடவைகள், பூமாலைகள், இனிப்பு வகைகள், திரவியப் பொருள்கள், மிளகு, தங்கம் மற்றும் வெள்ளி பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடப்பட்டு யாகம் நடத்தப்பட்டது.
யாகத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்து மகா தீபாராதனை நடைபெற்றதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீராடி பாத சமர்ப்பணம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் மற்றும் மாதாஜி ஆகியோர் செய்திருந்தனர்.