புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தனியார்மயமாக்கலுக்கான பூர்வங்கப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு இம்முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், செவ்வாய்க்கிழமை முதல்(பிப்.1) மின் துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
போராட்டம் காரணமாக மின் துறை சார்ந்த அன்றாட பணிகள் தடைபடும் என்பதால், போராட்டத்துக்கு அரசுத் தரப்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன், மின் துறை சார்ந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், மின்சாரம் மக்களுக்கான அத்தியாவசிய தேவை என்பதால் மின் விநியோகம் தடைபடக் கூடாது, மின் துறை சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது, போராட்ட நோக்கில் கூட்டம் கூடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுவை மின் துறை தனியார் மயமாக்கலை கைவிடும்வரை, அறிவித்தபடி போராட்டம் தொடரும் என்று மின் ஊழியர் கூட்டமைப்பினர் தெரிவித்து, வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.