விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தாறுமாறாக ஓடிய லாரி கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள தனியார் கம்பி கடைக்கு திண்டுக்கல்லில் இருந்து கம்பி ஏற்றிவந்த லாரியை, வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ்(34) ஒட்டி வந்துள்ளார். 25 டன் கம்பி ஏற்றிக்கொண்டு வந்த லாரி ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எடை போடும் நிலையத்தில் எடைபோடச் சென்றுவிட்டுத் திரும்பியபோது ஓட்டுனர் உறங்கிய நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பி.எஸ்.கே பூங்கா எதிரில் இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலையில் அமர்ந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடைக்குள் புகுந்த லாரியில் சிக்கிக்கொண்ட ஓட்டுனரை தீயணைப்புத் துறையினர் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.