நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் மாநில அளவில் வெளியிடப்படும் விளம்பரங்களை வெளியிடுவதற்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பம் செய்து முன்அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம், உத்தேசிக்கப்பட்டுள்ள அவ்விளம்பரத்தின் மாதிரி இரண்டு நகல்களோடு உரிய முறையில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிக்க- ஊரடங்கு தளர்வு: பிப்.14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மாவட்ட அளவில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளம்பரம் எண் மற்றும் நாள் ஆகியவை விளம்பரப்பகுதியில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.