தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீனவர்களைத் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வதைக் கண்டித்தும், இலங்கையிலுள்ள தமிழக மீனவர்களின் விசைப் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவர்கள் 3 நாள்களாக காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மீனவ சங்கத் தலைவர்களிடமிருந்து வருவாய்த் துறை, காவல் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவ சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்த நிலையில், மேலும் 12 ராமேசுவரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.